வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது!

ப்ளூ காய்ச்சல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக, குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ப்ளூ காய்ச்சல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது எச் 1 என் 1, இன்ப்ளுயன்சா காய்ச்சல் என்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உரிய விளம்பரங்கள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எச் 1 என் 1 இன்ப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு கற்றல் தடைபடாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10, 11, 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய வழி காட்டுதலின் படியும், பாதுகாப்புடனும் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ உதவிகளை செய்து அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வந்துள்ளன. “ப்ளூ” காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரோ அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், இங்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். “ப்ளூ” காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்ற இந்த சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும்; இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்கவும், இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, “ப்ளூ” காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், ‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதற்கேற்ப, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.