பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் பாட்டியாலா தொகுதில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் தோல்வி அடைந்தனர். இதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்து பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவில் அமரீந்தர் சிங் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரன் ரிஜிஜூ, பாஜக தலைவர் சுனில் ஜகார், பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில், அக்கட்சியில், தன்னை, அமரீந்தர் சிங் இணைத்துக் கொண்டார். மேலும், தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்துக் கொண்டார். முன்னதாக காலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அமரீந்தர் சிங் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.