மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு!

கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக உள்ளார் நாராயணன் ரானே. விதிகளை மீறி மத்திய அமைச்சர் நாராயணன் ரானே கட்டிய கட்டங்களுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணையில், பங்களா கட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 300 சதவீதம் கூடுதலாக கட்டடங்களை கட்டியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த நாராயணன் ரானே விடுத்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 8000 சதுர அடியில் பங்களா கட்ட அனுமதி பெற்றுவிட்டு 22 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டியதற்காக மத்திய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. நாராயண் ரானேயின் விதிமீறல் கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் மாநகராட்சி இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.