மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி!

மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் மத்திய பசுபிக் கடற்கரை பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் கோலிமா மிச்சோகன் ஆகிய மாகாணங்களின் எல்லையில் இருந்து தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் தொலைவில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து மைக்கோகன் கடற்கரை பகுதிக்கு ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பேரலைகள் எழுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக மெக்சிகோ காவல்துறை தெரிவித்திருக்கிறது.