ரஷ்ய மக்கள் புதினை எதிர்த்து போராட வேண்டும்: ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய வீரர்களை எதிர்த்து உக்ரைன் படையினரும் அசராமல் போரிட்டு வருவதால் போர் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் தற்போது அந்த நகரங்கள் ஒவ்வொன்றாக உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் உக்ரைனை பிடிக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது.

இந்தநிலையில் உக்ரைனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 லட்சம் வீரர்களை உடனே பணிக்கு திரும்பு மாறு ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடந்த 2 நாட்களாக வீதிகளில் இறங்கி பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டம் நடத்திய 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த புதிய உத்தரவால் பீதியடைந்த முன்னாள் படை வீரர்கள் நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்து விமான நிலையங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. இது பற்றி அறிந்த ரஷ்ய அரசு 18 வயது முதல் 65 வயதுடையவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து உள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட் வழங்க கூடாது என விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் உக்ரைன் போரில் 55 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் இறந்து உள்ளனர். உக்ரைனில் நடக்கும் இந்த குற்றம், கொலைகள் மற்றும் சித்ரவதைக்கு நீங்கள் உடந்தையாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் இது போன்று நடக்கிறது. இந்த போரால் ரஷ்யாவை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள், மகன்கள், பேரக்குழந்தைகளை இழந்து தவிக்கிறார்கள். ஒரு மனிதருக்காக (புதின்) இந்த போர் நடந்து வருகிறது. இப்போது தான் உங்களுக்கு சரியான நேரம் கிடைத்து இருக்கிறது. ரஷ்யா மக்கள் வாழ்வா? சாவா? என்பதை தேர்ந்தெடுத்து எதிர்த்து போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.