குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்: வானதி சீனிவாசன்

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்ததால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாருடன் இணைந்து அதிவிரைவு ராணுவ படையினரும் இணைந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்களை சிசிடிவி கேமாரா காட்சிகளை அடிப்படையாக வைத்துப் பிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கினர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கு காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது முதல்வருக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில அரசியல் சக்திகள் பாடுபட்டு வருகிறது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நம் பயணத்தை தொடர வேண்டும்” என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுக தான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள். தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதைத் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கூட ஆபாசமாக விமர்சித்தவர்கள் திமுக தலைவர்கள். தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு மரமாக வளர்ந்துள்ள திமுகவை வளர்ச்சி, தேச ஒற்றுமை என்கிற கோடாரி கொண்டு வீழ்த்த பாஜக முனைந்திருக்கிறது. கண்டிப்பாக திமுக என்ற நச்சு மரத்தை வளர்ச்சி, ஒற்றுமை என்ற கோடாரி கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எனவே, பாஜக வளர்வதைக் கண்டு பொறுக்கமாட்டாமல், வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுங்கள். பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கண்டறிந்து, இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் காவல் துறையைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.