ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை: திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் அக்டோபர் 2ம் தேதி சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்துவதற்காக , அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை தடை செய்துள்ளதால், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மற்றும் தொடர் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தினால் அதில் அசம்பாவிதங்கள் ஏதும் நேர வாய்ப்பு இருப்பதாகவும், ஆகையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதேபோல் சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், திருப்பூர், கோவை மற்றும் தென் மண்டல பகுதிகளான திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மொத்தம் 9 மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து இருக்கின்றனர். இந்த பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பொது அமைதி கெடும் எனவும், ஆகையால் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல் என்று முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சதி திட்டம் தீட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கம். காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி நாளில் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது மிகப்பெரிய ஆச்சர்யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று கூறிதான் 1948ல் தடை விதிக்கப்பட்டிருந்தது. 3 முறை தடை செய்யப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று வன்னி அரசு கூறியுள்ளார். அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்த இருந்த மனிதச்சங்கிலி பேரணிக்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், அக்டோபர் 2ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் நடத்துவதாக இருந்த அணிவகுப்பைத் தடை செய்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசிக சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த தடை ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்படி அனுமதி பெற்று பேரணியை நடத்துவோம். காவல்துறையிடம் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.