ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை!

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது. அதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்து 23 ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை ஏவி சோதித்தது. அதில் ஒரு ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது.

இந்த சரமாரி ஏவுகணை வீச்சால் தென் கொரியாவில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். மேலும், வட கொரிய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக தென் கொரியாவும் குண்டுகளை வீசி சோதித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது.

இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, ‘வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது’ என்று தெரிவித்தது.

இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, ‘ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்’ என்றார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.