ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் 5 ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டு விசாரணைக்கு பின்னர், ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாளிதழ் ஒன்றின் பதிப்பாளர் கோபால்ஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படவில்லை என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. மேலும், “தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது. உண்மை நீர்த்துப் போய்விடும். எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, சிபிஐ அமைப்புக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.