ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு: நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசு காளைகளை விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நலவாரியம் மற்றும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி கேஎம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா? தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கலாசார விதிகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா?, நாட்டு மாடு இனங்கள் இன வளர்ச்சிக்கு ஜல்லிக்கட்டு உதவுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீட்டா அமைப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். மேலும் விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் எனவும் லூத்ரா கூறினார்.

அப்போது நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர். கொசு போன்ற பூச்சியினங்கள் உங்களை கடிக்க வரும்போது, அதை அடித்து கொன்றால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா? என கேட்டனர். ஜூடோ போன்ற விளையாட்டுகளில் மனிதர்கள் இறப்பது குறித்து என்ன கூறுவீர்கள்? என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் காயங்கள் ஏற்படும் என தெரிந்துதான் பங்கேற்கிறோம் என்றார். விளையாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது தேர்வைப் பொருத்து அமைவதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு அதுபோன்று தேர்வு இல்லாமல் போகும்போது அவற்றுக்கு தன்னுரிமை உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டில் 11 லட்சம் காளைகள் பங்கேற்றன. சில புகைப்படங்களை கொண்டு எந்தவித முன்முடிவுக்கும் வரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும் என்பதால், அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் தொடர்ந்து வாதம் நடைபெறும்.