உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை: ஜெயக்குமார்

உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தன்று அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்ககோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் சுகாதார தலைநகராக தமிழகம் இருந்தது. திமுக ஆட்சியில் மருத்துவத்துறை முழுமையாக கவனிப்பாரற்று, நிர்வாகத் திறமையின்றி செயல்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு தினந்தோறும் செய்தியாளர்களை சந்திப்பதும், முதல்வருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதும்தான் வழக்கமாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளை ஏழை எளிய மக்கள்தான் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சென்ற மாணவி பிரியாவுக்கு உயிர் பிரிய வேண்டிய அவசியமே இல்லை. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை வரும். அரசு மருத்துவமனை ஒன்று நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. குரோம்பேட்டையில் பிறந்த 4 நாட்களே ஆன குழந்தை தவறான சிகிச்சையினால் இறந்துள்ளது. சரியான அளவில் மயக்க மருந்து கொடுக்காததால் எழும்பூர் மருத்துவமனையில் குழந்தை இறந்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் தமிழ்நாடு மருந்துகள் விநியோக கழகம் முறையாக மருந்துகள் விநியோகிக்கப்படவில்லை. பாராசிட்டாமல் போன்ற சாதாரண மருந்துகள் கூட அரசு மருத்துவமனைகளில் இல்லாத அவல சூழல்தான் உள்ளது. சுகாதார தலைநகரமாக இருந்த சென்னை, தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரும் சுகாதார அமைச்சரும் இதனைக் கண்டுகொள்வதில்லை. நடைப்பயிற்சியின் போது கூட மக்கள் பிரச்சினையை பேசாமல் தனது மகன் உதயநிதி நடித்த கலகத் தலைவன் குறித்துதான் முதல்வர் பேசுகிறார். இதுதான் நாட்டிற்கு முக்கியமான பிரச்சினையா? நடிகை விவகாரத்தில் சின்னவர் கோவித்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் விளக்கமளிக்கிறார்.

கொரோனா காலத்தில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தாதன் காரணமாக குழந்தைகளுக்கு தட்டம்மை பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவத்துறை பிரச்சனைகள் நிறைய இருக்கிற சூழலில் மருத்துவர்களை மிரட்டுவது, இடமாற்றம் செய்வது போன்றவை நடக்கிறது. மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. கொரோனாவை பொருத்தவரை அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கையால் திமுக அரசு தப்பித்துவிட்டது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

விமர்சனத்தை கருத்தில் கொண்டு அந்த தவறு மீண்டும் நடைபெறாத வகையில் அரசு செயல்பட வேண்டும். அறுவை சிகிச்சை மாற்றி செய்யப்பட்டது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியில் அடிப்படையில்தான் குறிப்பிட்டேன். நான் கூறியது தவறு என்றால் அரசு மறுப்பு தெரிவிக்கவும். அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்தவர்கள் விவகாரம் நடுநிலையுடன் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனகள் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் எழவில்லை. குற்றச்சாட்டுகள் எழாமல் பணிபுரிவது அரசின் கடமை. அதிமுக ஆட்சியில் அனைத்தும் சரியாகவே நடந்தது.

உதயநிதி பிறந்தநாளுக்காக சென்னை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்? எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?. பேனர்கள் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தால் அந்த அனுமதியை எங்களுக்கும் கொடுங்கள். இதுகுறித்து மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உதயநிதி தொகுதிக்கு வருவதே கிடையாது. உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை. மன்னராகவும், இளவரசராகவும்தான் வலம் வருகின்றனர். முதலமைச்சரின், தொகுதியிலும் உதயநிதி தொகுதியிலும் நிறைய பிரச்சினைகள் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பொதுக்குழுதான். பொதுக்குழு நீக்கியது என்றால் அதிமுக தொண்டர்கள் நீக்கியதுதான். ஓபிஎஸ் பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் அவர் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டார்.

ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும். அதற்கான முழுமுயற்சியை திமுக எடுக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டை வளர்த்துவிடுகின்ற வேலையைதான் திமுக அரசு செய்கிறது. திமுக அரசு மக்களாட்சி கிடையாது. மன்னராட்சி என்பதால் வாரிசு அரசியலை முழுமையாக ஏற்றுகொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.