ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் நடைபெறவில்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்ககோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வருகிறது. தற்போது தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வழக்கு வந்தது. அப்போது பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்ககோரி வாதம் முன்வைக்கப்பட்டது. பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், ‛‛தமிழகத்தின் பாரம்பரிய காளை இனங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டு கலாசார வேரை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றி இருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்” என வாதம் செய்யப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் வதைக்கப்படுவதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என பீட்டா தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இந்த வேளையில் குறுக்கீடு செய்த நீதிபதிகள், ‛‛வீடியோ ஆதாரம் என்பது தங்களுக்கு எந்த பகுதி வேண்டுமோ அதை மட்டும் பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் சிசிடிவியில் பதிவான ஆதாரம் என்பது அப்படியில்லை. அதில் அனைத்தும் பதிவாகும். உங்களிடம் சிசிடிவி பதிவு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?. அத்தகைய ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள்.

இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை கொடூரம் என்றதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை. மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது, உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்பிக்கிறீர்கள். இது விதிமுறைகளை முறையாக கட்டாயம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே. மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகிறது. நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவை தானே பயன்படுத்தப்படுகிறது. போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்றவை எல்லாம் தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். ஆனால், 1000 ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தபோட்டிக்காக காளைகள் தனியாக பழக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். ஆனால் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மேலும் தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும் இந்த போட்டிகளுக்கான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால் அதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

அதற்கு பீட்டா அமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல், ‘ஏற்கனவே இந்த நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டு மிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.