தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார்: தலாய்லாமா!

பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். தகவல் அறிந்து டெல்லியில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரதமர் தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். இதன் பின்னர் உடனடியாக தனது பணிக்கு திரும்பிய பிரதமர் மோடி, திட்டமிட்டபடி மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘உங்கள் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் புத்தகயாவில் இருக்கிறேன். அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் தாயார் 100 ஆண்டுகள் நல்ல முறையில் நீண்ட வாழ்வை வாழ்ந்துள்ளார். தனது மகன் இந்த மாபெரும் நாட்டின் பிரதமரானதைக் கண்டு நிச்சயம் அவர் பெருமைப்பட்டிருப்பார்’ என தலாய்லாமா தெரிவித்துள்ளார்.