இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!

உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என்றும், புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டொன்று போனால், வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால், வளர்ச்சியென்பது இன்னும் பலமடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியையும், எழுச்சியையும் கொண்ட ஆண்டாக அமைந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த மந்த நிலையை மாற்றி காட்டினாம். அதன் மூலம் மக்கள் வாழ்வு வளம்பெற தொடங்கியது. இப்போது, 2023ம் ஆண்டில் ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்படும் ஆண்டாக அமைய நானும், நமது அரசு தொடர்ந்து பாடுபடுவோம்.

மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்ப்பது மட்டுமே எனக்கு முக்கியம். அதனால் தான் முதலமைச்சர் பதவியை, பெரும் பொறுப்பாக பார்த்து பணியாற்றி வருகிறேன். கடந்த ஓராண்டு காலத்தில், நமது அரசு மக்களுக்கு மகத்தான சாதனைகளை செய்திருக்கிறது. அதனை பட்டியல் போட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியமல்ல. அதன் மூலம் பயன்படக் கூடிய மக்களுக்கு நன்றாக தெரியும். நம்பர் 1 மாநிலம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அன்றைக்கே, எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி பெறுவது மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்களும் பாராட்டும் முதலமைச்சராக செயல்படுவேன் என்று சொன்னேன். அப்படிதான் செயல்பட்டு வருகிறேன். அரசு விழாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களின் அன்பை உணர்கிறேன். நீங்கள் அளிக்கும் பாராட்டை பணிவோடு ஏற்கிறேன். அது நான் இன்னும் கவனமாக பணியாற்ற ஊக்கம் தருகிறது. இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சராக இந்தியா டுடே இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனைவிடவும், தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் ஆவது தான் பெருமை என்று சொன்னேன். இதனை மனதில் வைத்து தொடர்ந்து பணியாற்றினோம். அதற்கு பலனாக, கடந்த வாரத்தில் தமிழ்நாடும் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தகுதிபெற்றுள்ளது. 12 குறியீடுகளில் 9ல் தமிழ்நாடு முன்னிலை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது திமுகவின் உழைப்பிற்கு கிடைத்திருக்கிற சான்றிதழ். ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைத்ததால் தான், இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

நித்தமும் மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். கடந்த ஓராண்டில் 650க்கும் அதிகமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். அதில் 550க்கும் அதிகமானவை அரசு நிகழ்ச்சிகள், 90க்கும் மேலானவை கட்சி நிகழ்ச்சிகள். தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஓராண்டில் ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் செய்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலமாக ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். 2.19 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலமாக ஒருநாளில் மட்டும் 36 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைகிறார்கள். இப்படி கோடிக்கணக்கானோர் பயனடைந்து நெஞ்சார வாழ்த்தும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழவர்கள், மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலையினர் என அனைவருக்கும் புதிய திட்டங்கள் வரவிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பது கல்வி, வேலைவாய்ப்பு, அறிவுதிறன், தொழில் வளர்ச்சி, அனைவருக்குமான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாக மாறுவதுதான். அந்த லட்சியத்திற்காக என்னையே நான் ஒப்படைத்துகொண்டு செயல்படுவேன். அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி நம்மை பிளவுபடுத்தும் சாதிய, மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடமளிக்க கூடாது. மொழியால், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும். இளைய சமுதாயமானது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும், அந்த கனவை எட்டிபிடிக்க உழைக்க வேண்டும். அதில் வெற்றிபெற்று அனைவரையும் பெருமைபடுத்த வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமே அதுதான்.

படிப்பில் இருந்து திரைதிருப்பும் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. இளைய சமுதாயம் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. இளைய சமுதாயம் மூலமாக மட்டுமே இணையற்ற மாநிலத்தை உருவாக்க முடியும். சுயநலமாக வாழாமல், சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும். பொதுதொண்டு செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்த வகையில், கடந்த ஆண்டை போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக, புதுவாழ்கை தருக, அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.