பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பை ஏற்கிறோம்: ப.சிதம்பரம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளை கருப்பு நாளாக பெரும்பாலான எதிர் கட்சிகள் அனுசரிக்கின்றன. இதனிடையே, மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பணமதிப்புழப்புக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பணமதிப்பிழப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்ப நடவடிக்கைக்கு ஆதரவாகவும், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், பணமதிப்பிழப்பிற்காக கூறப்பட்ட நோக்கங்கள் எட்டப்பட்டதாக பெரும்பான்மை நீதிபதிகள் முடிவுக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். உண்மையில், பெரும்பான்மை நீதிபதிகள் பணமதிப்பிழப்பின் இலக்குகள் அடையவில்லையா என்ற கேள்வியை தெளிவாக்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பு வழங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உச்ச நீதிமன்ற வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற கருத்து வேறுபாடுகளில் இந்த மாறுபட்ட தீர்ப்பு இடம் பெறும்” என்று பதிவிட்டுள்ளார்.