திமுகவினர் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்: அண்ணாமலை!

திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம், திமுகவினர் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இன்று செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் ஆத்திரப்பட்ட அண்ணாமலை, ஊடகங்களை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனியார் டிவி சேனல் செய்தியாளரிடமும், யூடியூப் நிருபர்களிடமும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக இருந்தாலும் சேனல் பெயரையும் செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள் என்று சீறினார். யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் தன்னுடைய செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரவேண்டாம் என்றும் அவர்களை அலுவலகத்திற்குள் விட வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழகத்தின் கெட்ட காலம் என்னவென்றால், காசு இருக்கக் கூடியவர்கள் குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் ஒரு டிவி சேனல், தன்னால் முடிந்தவர்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்துக் கொள்கின்றனர். எல்லோருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு. கட்சிகளுக்கென்று சொந்தமாக ஒரு டிவி சேனல், ஒரு நியூஸ் பேப்பர் வைத்துள்ளனர். இதுபோன்றவர்கள் ஒரு கட்சியை, அதிலிருக்கக் கூடியவர்களை டார்கெட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனையும் தாண்டி டி.ஐ.பி.ஆர் என்ற அமைப்பு, அவர்கள்தான் அரசின் விளம்பரத்துக்கு எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்வார்கள். எந்த ஊடகங்கள் தங்களைச் சார்ந்து செய்திகளை வெளியிடுகிறது, எந்த ஊடகங்களை தங்களைச் சார்ந்து செய்திகளை வெளியிடவில்லை என்பதைப் பார்த்து, விளம்பரங்களுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 8 கோடி ரூபாய் வாங்கும் செய்தித்தாளும் உள்ளது. வெறும் 40 லட்சம் ரூபாய் வாங்குகிற செய்தித்தாளும் உள்ளது. 18 கோடி ரூபாய் வரை வாங்கிய டிவி சேனல், நியூஸ் பேப்பர் இருக்கிறது. எதற்காக கொடுக்கிறார்கள் என்பதற்கு சம்பந்தமே இருக்காது. செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர பட்ஜெட்டை திமுக ஒரு கருவியாக பயன்படுத்தி, ஜர்னலிஸத்தை கட்டுப்படுத்துகின்றனர். செய்தி வெளியிட பிஜிஆர் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு திமுக அரசு எப்படி சலுகைகள் வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்பதற்கான ஆதாரங்கள் தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக செய்தி வெளியிட ஒரு சேனல் தயார் என்றனர். ஒரு மணி நேரம் இதுகுறித்து பேசுவதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ரெடியாக இருக்கிறார். நாளை 7 முதல் 8 மணி வரை இதுகுறித்த நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டனர்.

இன்று வந்த அந்த ஊடக நண்பர், நான் தான் வந்து பேச வேண்டும் என்றார். DIPR தங்களுக்கான பட்ஜெட்டை நிறுத்திவிடுவார்கள் என்பதற்காக ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி, நான் வந்தால்தான் ஆதாரங்களை வாங்குவோம், நான் வந்தால் தான் பேசுவோம் என்பதெல்லாம் அபத்தம். ஆதாரங்களை வெளியிட்டு நிகழ்ச்சியை ஒளிப்பரப்புவதாக சொன்னீர்கள், ஆதாரங்களும், கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர், மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் தயார். நீங்கள் தயாரா? என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

முன்னதாக, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்டு கோபமாகப் பேசினார் அண்ணாமலை. இதனால், செய்தியாளர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாமலை நிதானமின்றிப் பேசியதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சில முறை, செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசியிருந்த நிலையில், இன்றைய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.