போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும். “தன் காவல் சரகத்தில் ஒரு கடையில் கூட கஞ்சா விற்கவில்லை” என்று ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் அறிவிக்கும் நிலை வர வேண்டும். “தன் உட்கோட்டத்தில் அப்படியொரு பொருட்கள் நடமாட்டமே இல்லை” என்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் காலம் மாற வேண்டும். எல்லாவற்றையும் விட தன் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை எதுவுமே இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம் என பெருமிதத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தெரிவிக்கும் நிலை வரவேண்டும், அப்போது தான் தம்மைப் போல் – தங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற நிம்மதி பெற்றோர்களுக்கும், தாய்மார்களுக்கும் வரும்.

ஒவ்வொரு குற்றவாளி கைது செய்யப்படும்போதும் அக்குற்றவாளி இரண்டாவது முறையாக இந்தக் குற்றத்தைச் செய்கிறானா என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற குற்றவாளிகள் ஜாமினில் செல்வதை சட்டரீதியாகத் தடுக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் சி.ஆர்.பி.சி.யின் (Cr.Pc) கீழ் பிணை முறிவு பத்திரம் மூலமாக “உறுதிமொழி பெறுவது” (Bind Over) கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும், கஞ்சா குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து வகைகளை போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால் மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட்டு, மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஈடுபட்டு வருகிறது. அண்டை மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்த ஆலோசனை மேற்கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திடவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.