இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்!

இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் என்கிற முகமது இம்ரான்.

இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் என்கிற முகமது இம்ரான். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 2019-ம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டார். பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இம்ரானுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி அந்த நாட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த இம்ரான் கடந்த வாரம் இலங்கையில் இருந்து தப்பி கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை இலங்கை போலீசார் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நாட்டின் உளவுத்துறை மீது இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து மந்திரி சபை செய்தி தொடர்பாளர் பந்துல குணவர்தனே கூறுகையில், “இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது இலங்கைப் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும். 2019-ம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின்னர் இலங்கை உளவுத்துறை மீது இதேபோல் கவலைகள் எழுப்பப்பட்டன” என்றார்.