அண்ணாமலை திருந்தவில்லை, பாஜகவாவது திருத்துமா?: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விக்கு பதிலளிக்காமல் தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அந்த பதிவில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை பார்த்தேன். பாஜகவில் இருந்தவரான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள், பாஜகவில் செயல்படும் பெண்களுக்கு எதிரான ஒழுக்கக் கேடு தொடர்பானவை மட்டுமல்ல, சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைக்கு உரியவை. அது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நாகரிகமான முறையில் பதில் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதனை விடுத்து எதை எதையோ பேசி வம்பு வளர்த்திருப்பது உறுத்தலாக இருக்கிறது.

சில நாட்கள் முன்பு அவர் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் எப்படி வாங்கப்பட்டது என்ற கேள்வி வந்தது. இந்த தேதியில், இவ்வாறு வாங்கினேன் என்று எளிதாக பதில் சொல்லியிருக்க முடிந்த கேள்விதான் அது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் விமானத்தின் பாகங்களில் செய்த கடிகாரம், இதை கட்டுவதுதான் தேசபக்தி என்று எதையெதையோ கதைக் கட்டினார்.

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், மாநில கல்வி நிறுவனங்களின் முடிவில் மூக்கை நுழைத்தல், நிதி ஒதுக்கியும் கட்டுமானப் பணிகள் தொடங்காத மதுரை எய்ம்ஸ், அதலபாதாளத்தில் நாட்டின் பொருளாதாரம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டியுள்ளது. ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரிகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை‌ காலில் போட்டு மிதிப்பதாகும். ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்‌ திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.