பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: விஜயபாஸ்கர்

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் குறித்து 9ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வருவார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கலகத் தலைவன் திரைப்படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்கும் முதல்வர் என்றாவது ஒப்பந்த செவிலியர்கள் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டிருப்பாரா? இரண்டரை ஆண்டுகளாக வேலை வாங்கி விட்டு இப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டது சரியா. ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒப்பந்த செவிலியர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய கனிமொழி இப்போது எங்கே சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது:-

செவிலியர்கள் உடுத்தியுள்ள கவச ஆடைகளை தற்போது உள்ள சுகாதார துறை அமைச்சர் உடுத்தி 8 அல்லது 12 மணி நேரம் கழிப்பிடம் செல்லாமல் பணியாற்றினால் ஆட்சி செய்து வரும் அரசு என்ன கூறினாலும் அதனை நான் தட்டாமல் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை இரண்டு ஆண்டு ஏழு மாதங்கள் அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களின் பணி நீக்க ஆணையை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், உயிரைக் காப்பாற்றும் செவிலியர்களை பணியமர்தத்திவிட்டு இப்போது முறைகேடான பணிநியமனம் செய்திருக்கிறோம் என்பது அபத்தம் எனக் கூறிய அவர் முறைகேடு உள்ளதாக கூறுவதை என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்றுசொன்னார்கள்; அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிப்படி அவர்கள் நடந்து கொண்டால் போதும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 9 தேதி தொடங்க உள்ள பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்த கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் குரல் எழுப்புவார் என்றும் கூறினார்.