அமித்ஷா என்ன அயோத்தி ராமர் கோயில் பூசாரியா?: மல்லிகார்ஜுன கார்கே

அயோத்தியில் ராமர் கோயில் எந்த தேதியில் திறக்கப்படும் என்பதை அறிவிக்க நீங்கள் என்ன அந்தக் கோயில் பூசாரியா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ஹரியானாவுக்குள் நுழைந்துள்ளது. இதில் இன்று காலை பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பாஜக யாருக்காக அரசியல் செய்கிறது என்ற குழப்பம் வெகுநாட்களாக எனக்கு இருக்கிறது. மக்களுக்காக பணியாற்ற வேண்டிய ஒரு அரசியல் கட்சி, கோயில்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்றால், அரசியல் கட்சித் தலைவர்கள் எதை பற்றி பேச வேண்டும். அந்த மாநிலத்தில் செய்யப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை பற்றி பேச வேண்டும். ஆனால், திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது குறித்து பேசியிருக்கிறார்? நான் தெரியாமல்தான் கேட்கிறேன்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பை பற்றி பேசுவதற்கு நீங்கள் (அமித் ஷா) என்ன அந்தக் கோயில் பூசாரியா? அதுவும் தேர்தல் சமயத்தில் ராமர் கோயில் திறப்பு பற்றி பேசுவதற்கு என்ன காரணம்? நீங்கள் ஒரு உள்துறை அமைச்சர். உங்கள் வேலை என்ன? நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது., நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது.. இதுதானே உங்களின் வேலை. அந்த வேலையை முதலில் சரியாக பாருங்கள். அதை விட்டுவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை பற்றி பேசுவதற்கு நீங்கள் யார்? அதை கோயில் நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள்.

நாட்டில் இப்போது எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், என்றாவது பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இவற்றை பற்றி பேசி இருக்கிறார்களா? கிடையாது. ஏனெனில், அவர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் பற்றி அக்கறை இல்லை. தேர்தல் மட்டும்தான் அவர்களின் குறி. தேர்தல் நேரத்தில் எதை கூறி மக்களை திசைதிருப்பலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எப்படி கவிழக்கலாம் என்பது பற்றிதான் அவர்களுக்கு கவலை. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.