அரசியலும், சூழ்ச்சியும் தான் தமிழ்நாட்டை தமிழகம் என்பது: திருமாவளவன்!

தமிழ்நாடு, தமிழகம் என்பது சொல் விளையாட்டு அல்ல; இதில் சூசகமும், சூழ்ச்சியும், அரசியலும் உள்ளதாக நெல்லையில் நடைபெற்ற பொருணை நல்லிணக்க பொங்கல் விழாவில் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருணை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், பப்புவா நியூகினிவா சுதந்திர நாட்டில் உள்ள வெஸ்ட் நீ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சசிந்திரன், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன், சர்வ சமயத்தைச் சார்ந்தவர்கள் சர்வ கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சவேரியார் கல்லூரி உள்ளே அமைந்துள்ள தேவாலயம் முன்பு புத்தரிசி புதுபானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:-

பொங்கல் பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் விழா. இந்த விழா சமூக சமத்துவ நல்லிணக்க திருவிழாவாக திகழ்கிறது. மதச்சார்பற்ற புராணக் கதை பின்னணி இல்லாமல் எந்தவித பிணைவும் இல்லாமல் கலாச்சாரத்தை பேசும் விழாவாக திகழ்ந்து வருகிறது. நல்லதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு இணக்கமாக இருக்கக் கூடாது.

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள் தான் உள்ளது. அதேசமயம் தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஸ்டரியம் என்றாலும் நாடு என்பதுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் சென்று பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என கூற அவர்களுக்கு தைரியம் உண்டா? கலாச்சாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும். பண்டிகைகள் ஆட்டம் பாட்டம் கூத்துக் கொண்டாட்டம் என இழுத்துச் செல்லும் . சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்க விடாமல் மயக்கி மாயை உருவாக்கும். உங்களுக்கு வீடு கட்டி தருவதைவிட கோவில் கட்டி தருவதற்கு தயாராக உள்ளார்கள். கல்வியை கொடுப்பதை விட விநாயகர் சதுர்த்தி கொண்டாட விநாயகர் சிலைகள் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்துவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்குப் பின்தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும் குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ பெருமைப் படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாறை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.