தேனீரில் விஷம்: போலீசாரை சந்தேகித்த அகிலேஷ் யாதவ்!

தனது அட்மினை கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்த டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் கொடுத்த தேநீரை அருந்த மறுத்து அதில் விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ளார். இவரது கட்சியின் டுவிட்டர் பக்கத்தை மணீஷ் ஜெகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாக குற்றச்சாட்டில் ஜெகனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவரை விடுவிக்கும்படி கோரி டிஜிபி அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றிருந்தார். அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகவே சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றிருந்தனர். டிஜிபி அலுவலகம் வந்த அகிலேஷுக்கு போலீஸ் அதிகாரிகள் குடிப்பதற்காக தேனீர் கொடுத்தனர். அப்போது அகிலேஷ் யாதவ் தொண்டர்களிடம் உங்களுக்கு தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் கலந்து வைத்துவிடுவார்கள். அவர்களை (போலீசார்) நம்ப மாட்டேன். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கிக் குடித்துக் கொள்வேன். அவர்களுக்கான (போலீசாருக்கு) தேநீரை அவர்களே குடித்து கொள்ளட்டும் என போலீசாரிடம் கூறியிருந்தார். அதன்பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சித் தொண்டர் ஒருவரை அனுப்பி வைத்தார்.

சமாஜ்வாதி கட்சித் தொண்டரான மணீஷ் ஜெகனை லக்னோ போலீசார் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. வெட்கக் கேடானது என்றும் தெரிவித்தார். மேலும் உடனடியாக ஜெகனை போலீசார் விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.