தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது: குஷ்பு

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன்னை போல சில பெண்களும் அண்ணாமலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவர் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையை குறித்து தினம்தினம் பலவித குற்றசாட்டுகளை வைத்து வைத்து வருகிறார். இந்த நிலையில், காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ சுந்தர் கலந்து கொண்டார். முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் குஷ்பு பொங்கல் வைத்து வழிபட்டு பொங்கலை பரிமாறிக்கொண்டதுடன், வண்ண உடைகளுடன் வெள்ளிகும்மியாட்டம் ஆடி அசத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். திமுகவில் எனக்கு எதிராக தான் நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது. அண்ணாமலை களத்தில் போராடினார் என்றார்.

குஷ்புவிடம் தமிழக அரசின் பொங்கல் பரிசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்கக் கேடானது. பொங்கல் பரிசு ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் என்று பிச்சை கொடுப்பது போல் இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு, இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ளக் கூடாது. சுயமரியாதை ஆட்சி என்று கூறும் திமுக அரசு ஒரு கரும்பு கொடுக்கிறது. இதனை சுயமரியாதையுடன் வாழும் தமிழர்கள் வேண்டாம் என்றே கூறுவார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு விவகாரம் பற்றிய கேள்விக்கு, தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் தான் என்றார்.

தொடர்ந்து பேசியவர், கமல்ஹாசன் காங்கிரஸ் நடைபயணத்தில் பங்குபெற்றது அவருடைய கட்சியின் உரிமை. பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கும் போகமாட்டேன். வீட்டில் தான் இருப்பேன்.
அண்ணாமலை முந்தைய தலைவர்கள் போல இல்லை அவர் ஒரு துணிச்சலான தலைவர். தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வது தவறில்லை. மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி என்றார்.

குஷ்பு பேசியதற்கு பிறகு காயத்ரி ரகுராம் அதற்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், அண்ணாமலைக்கு நேருக்கு நேர் பேச தைரியம் இல்லாததால் கட்சியில் இருப்பவர்களை பேச வைக்கிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். பாஜகவில் உள்ள வேறு யாருடனும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.