மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு!

முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களமிறங்க உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணைய தளத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் மதுரைதான் நினைவிற்கு வரும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர மாநிலத்தின் பல கிராமங்களிலும் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடத்தப்படும். ஆனால் தலைநகர் சென்னையில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவே இல்லை.

உச்சநீதிமன்ற தடைக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன. தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும். ஜல்லி்க்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.