பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு!

பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 83-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் பேசும்போது, ‘‘ஜனநாயகத்தின் சாராம்சம், மக்களின் ஆணையின் மேலோங்கி அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் உள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்கும் சட்டத்தை கையாள்வதற்கும் பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு எந்த அதிகாரத்திற்கும் உட்பட்டது அல்ல. இது ஜனநாயகத்தின் உயிர்நாடி. இது உங்களின் சிந்தனையுடன் கூடிய பரிசீலனையில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அதிகரித்து வரும் இடையூறுகள் கவலை அளிப்பதாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பை திருத்தும் பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு எந்த அதிகாரத்திற்கும் உட்பட்டது அல்ல. அதனால் தான் நாட்டின் உச்சமாக பாராளுமன்றம் திகழ்கிறது’’ என்று கூறினார்.

இந்தநிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரின் “பாராளுமன்றமே உச்சம்” என்ற கூற்றை மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு ராஜ்யசபா தலைவர், நாடாளுமன்றம் தான் உச்சம் என்று கூறுவது தவறு. அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. அடிப்படைக் கொள்கைகள் மீது பெரும்பான்மையினரால் நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பதற்காகவே “அடிப்படை கட்டமைப்பு” கோட்பாடு உருவானது. அதுதான் அரசியலமைப்பு. பாராளுமன்ற முறையை குடியரசுத் தலைவர் முறைக்கு மாற்ற பாராளுமன்றம் பெரும்பான்மையுடன் வாக்களித்ததாக வைத்துக்கொள்வோம். அல்லது அட்டவணை 7ல் உள்ள மாநிலப் பட்டியலை ரத்து செய்து மாநிலங்களின் பிரத்யேக சட்டமியற்றும் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும். அத்தகைய திருத்தங்கள் செல்லுபடியாகுமா? உண்மையில், மாண்புமிகு துணை குடியரசுத் தலைவரின் கருத்துக்கள், அரசியலமைப்பை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் எச்சரிக்க வேண்டும்” என்று சிதம்பரம் டுவீட் செய்துள்ளார்.