தமிழக அரசின் இலச்சினையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான்: அண்ணாமலை

தமிழக அரசின் இலச்சினையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான்; தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘நம்ம ஊரு நம்ம பொங்கல்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 108 பொங்கல் பானை வைத்து பொங்கலிடும் நிகழ்ச்சியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் 2008 இல் திட்டமிட்டபடி 4ஏ வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை திமுக அரசு கொண்டுவருமேயானால் பாஜக அதனை கண்டிப்பாக எதிர்க்கும். 4 ஏ வடிவமைப்புபடி அந்த திட்டததை செயல்படுத்தினால் அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேறு வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர திட்டமிருப்பதாக மார்ச் மாதம் 2018 இல் உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

திமுக கொண்டு வரப் போகும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே. திமுக அரசு கொண்டுவந்துள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 4ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதற்கு மத்திய அரசு அனுமதியும் கிடைக்காது.

நாடு முழுவதும் இப்போதுள்ள ஆளுநர்கள் தகுதியானவர்களாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஆளுநர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அவர்களே உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆளுநர் செய்யும் செயல் ஒரு நியாயம் என்றும், இப்போது முதல்வரான பிறகு ஒரு நியாயம் என்றும் தமிழக முதலமைச்சர் சொல்லி வருகிறார்.

தமிழகத்திற்கு இதுவரை 45 மத்திய அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து அறிக்கை எடுத்து சென்றுள்ளனர் அவர்களின் பயணத்தின் வெளிப்பாடு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிய வரும். தமிழக ஆளுநர் 2021 இல் 25 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை தமிழக அரசு கொடுத்துள்ள 84 மசோதாவில் 15 க்கு மட்டுமே அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளார்.

ஆளுநர் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசுவதில் என்ன தவறு. அதனை ஏற்பதும், ஏற்காததும் நமது செயல். தமிழ்நாடு என்பதும், தமிழகம் என்பதும் ஒரே பொருள்தான். ஆளுநர் எந்த காலகட்டத்திலும் எந்த விதமான உணர்வையும் தூண்டி பேசியதில்லை. இவர்கள் ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என செய்கிறார்கள். ஆளுநருக்கு தமிழக மக்கள் மீது அன்பு, பாசம் உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் தமிழக அரசின் இலட்சினையை பயன்படுத்தாதது தவறுதான். தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் இணக்கமாக செல்ல வேண்டும். தமிழகத்தில் தற்போது சட்டசபையில் நடந்ததை போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது.

ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்து நேரடியாக பேசாமல் இருப்பதால்தான் திமுக சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிகிறது. மக்களாட்சிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை , மாண்பை ஏற்று ஆளுநர் இங்கு பத்திரிக்கையாளரை சந்திப்பதில்லை. ஆளுநர் பத்திரிக்கையாளரை சந்தித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரும். எனவே திமுக அரசு ஆளுநரை சீண்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மத்திய அரசின் மீது எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுகவினர் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். கொள்கை ரீதியாக எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. 2024 தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக இல்லை. பாஜக தலைமை எனக்கு பல்வேறு பணிகளை கொடுத்துள்ளது அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜக வளர்ந்ததாக நான் சொல்லப் போவதில்லை. எனக்கு முன்னிருக்கும் தலைவர்கள் கட்சியை நல்லபடியாக வளர்த்ததன் வளர்ச்சியே இப்போது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.