என்னுடைய அருமை தங்கை கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார்: ஸ்டாலின்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி’ என்று சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.1.2023) சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை – மாநகராட்சி விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – இராமகிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 14.1.2023 முதல் 17.1.2023 வரை மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும். சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த விழாவில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்ச பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா. எழிலன், ஆ. தமிழரசி, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர் என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. ஒரு திருவிழாவில் எப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவும், குதூகல மனநிலையோடு இருப்பார்களோ அப்படித்தான் நம்முடைய நம்ம ஊரு திருவிழாவிலும் நாம் எல்லோரும் கலந்துகொண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து பணிகள் இருந்தாலும், இந்த கலை நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு நான் இங்கு வந்து பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படி பொழுதுபோனது என்று எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது. திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது. ”கலைஞர்” வழியில் நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி, மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு. அதனால்தான், இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தனித்தனியாக இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க இருக்கிறோம். பொதுவாகவே மக்கள் தனித்தனித் தீவுகளாக தங்களை இப்போது மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். உண்மையான பொழுதுபோக்கு என்பது நம்முடைய கலைகள்தான். அந்தக் கலைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், நம் மனதைப் பண்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.