சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!

ஆளுநர் பதவிக்கு சற்றும் தகுதியில்லாதவர் ரவி என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளதோடு ரவியை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்து பங்கேற்றன. இதனிடையே ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் பேசியதாவது:-

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. மாநில அரசின் நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட 21 மசோதாக்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வரும் தமிழக ஆளுநர், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜன.09 அன்று உரை நிகழ்த்திய போது மரபை மீறிய, சட்டமன்ற ஜனநாயகத்தை மீறிய செயல் கண்டனத்திற்குரியது.

ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி அவர்கள் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, தமிழ்நாடு, திராவிடம் மற்றும் சமூகநீதி வெற்றியின் அடையாள வார்த்தைகள், தலைவர்கள் அடங்கியவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் மரபை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார்.

அதேபோல் நேற்று ஆளுநர் மாளிகையில் ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். அவர்கள் தான் உங்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று, கூட்டாட்சிக்கு விரோதமாக நிர்வாக ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளார். மட்டுமின்றி ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் இருந்து தமிழ்நாடு என்கிற வார்த்தையையும், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக இவ்வாறு செயல்படுவது என்பது சட்டவிரோதமானது.

அரசியல், மத, சாதி, மொழி, பாலின ரீதியான பாரபட்சமற்ற நிலையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் அரசியல் சாசன பதவியை வகிக்கிறேன் என்பதையும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே தனது விசுவாசமும், உறுதிப்பாடும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் மறந்து விட்டார். ஆகவே, ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.