அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா்.

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு சசிகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:-

ஆளுநரை நடத்துவதற்கென்று ஒருமுறை உள்ளது. அந்த அடிப்படையில் அவரை தமிழக அரசு நடத்த வேண்டும். ஆளுநருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ என்கிற முடிவை ஒரே மாநிலத்தை வைத்து மட்டும் எடுக்க முடியாது. பெரும்பான்மை மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்பதான் முடிவு செய்ய முடியும்.

மக்களவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்காக எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கும் திட்டம் உள்ளது. அதிமுக நிச்சயம் ஒன்றிணையும். இவ்வாறு அவா் கூறினார்.