பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புபிடி வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து!

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்றும் பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வ குடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவி உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ பா.ஜ. க சார்பில் நன்றி களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறிஉள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்மபூஷன் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.