மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு: சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஜனவரி 27ம் தேதி சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டதால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிக்கல் நாட்டிய சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஒற்றை செங்கலை கடந்து இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டு நிறைவடையும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2026ல் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா முடிவடைந்து 4 ஆண்டுகளான நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டுவிட்டர் பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு. அவ்விழாவில் பேசிய பிரதமர் “இந்நிகழ்வு ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது” எனப் பேசியிருந்தார். ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.