பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும்: வி.கே.சிங்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-

கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெறும். சேலம் சென்னை எட்டு வழிச்சாலையில் பசுமை வழிச்சாலையாக மாற்றம் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில் திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.