தி.மு.க. எம்.பி.க்கள் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டி.ஆர். பாலு உள்பட தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை, இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், பாராளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோன்று, தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது. தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது பற்றியும், படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்வது பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும். சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது; மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது ஆகியன பற்றியும் வலியுறுத்த வேண்டும்.

கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, என்.எல்.சி. நிறுவனத்தின் வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது.