யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழர்கள் ஒற்றுமை பேரணி!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை பேரணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுதந்திர தினமான பிப்ரவரி 4-ம் தேதிக்கு முன் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விகரமசிங்கே அறிவித்திருந்தார். இதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய அவர் தமிழர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அதிகார பகிர்வளிக்கும் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவரிடம் தமிழர் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், 13-வது திருத்த சட்ட உள்ளிட்ட எந்த அரசியல் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்க கூடாது என சிங்கள தலைவர்கள் ரணில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் எந்த முடிவையும் எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர்களின் தாயக பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை சுநத்திர தினமான பிப்ரவரி 4-ம் தேதியை துக்க நாளாக அறிவித்து அன்று யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் ஒற்றுமையை காட்ட மாபெரும் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கி மட்டக்களப்பு வரை நடைபெறும் இந்த பேரணிக்காக வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் அவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட அதே நாளில் தங்களுக்கான உரிமைகளையும், அரசியல் அதிகாரத்தையும் கோரியும் தமிழர்களின் ஒற்றுமையை ரணில் அரசுக்கு கட்டவும் இந்த பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் பல்வேறு தலைவர்களை சந்தித்து விளக்கி வருகின்றன. வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு சமூக அமைப்புகள், மத தலைவர்கள் அரசியல் அமைப்புகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.