உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம்: ஜெயக்குமார்

உச்சநீதிமன்ற தீர்ப்பை 100 சதவீதம் முறையாக நாங்கள் பின்பற்றுகிறோம். தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து பன்னீர்செல்வம் தரப்பினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:-

அதிமுக தலைமையிலான கூட்டணியிலே பாஜக உள்ளது. 7ம் தேதி கடைசி நாள். அதற்குள் அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள். உட்கட்சி விவகாரங்களில் அவர்கள் என்றைக்கும் தலையிடுவதில்லை. ஆனால் தோழமை, நட்பு, கூட்டணி என்ற அடிப்படையிலே கருத்துக்களைச் சொல்லலாம். கருத்து என்பது வேறு. தலையீடு என்பது வேறு. கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் எங்கள் கட்சியின் விருப்பம். பாஜகவின் கருத்தை ஆதரிக்கிறீர்களா. பரிசீலனையில் எடுத்துக்கொள்வீர்களா? அதனை எல்லாம் தாண்டி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. இப்போதைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம்.

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனின் வாட்ஸ் அப் மூலமும், இ- மெயில் மூலமும் பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒப்புதல் படிவம் அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் ஒப்புதல் கடிதம் அதிமுக தலைமை கழக ஊழியர்கள் மூலம் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை 100 சதவீதம் முறையாக நாங்கள் பின்பற்றுகிறோம். தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து பன்னீர்செல்வம் தரப்பினர்தான் முடிவு செய்ய வேண்டும், நாங்கள் கருத்து கூற முடியாது.

ஓபிஎஸ் இரட்டை இலையை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தான், அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இன்றைக்கு அதிமுக எல்லோருக்கும் அந்த கடிதங்களை முறையாக அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு நான் அளிக்கும் அட்வைஸ். 7ம் தேதி கடைசி நாள். அதற்குப் பிறகு நீங்கள் கேட்கும் விஷயங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சி. நான் கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.