ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜனதா ஆதரவு: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதல் ஒரு பக்கம் இருக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளார். ஆரம்பம் முதலே ஒற்றை வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிவந்த அண்ணாமலை அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதனால் இடைத்தேர்தல் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.

தற்போது இபிஎஸ் வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு பாஜக ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும், திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.