நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும்: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சகோதரி மகளின் திருமணம் நடைெற்றது. இதில் சீமான் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். அதை சீரமைப்பதை விட்டுவிட்டு கலைஞருக்கு சிலை வைக்க பணம் செலவு செய்கிறார்கள். பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அந்த பணங்களை செலவு செய்ய வேண்டும். அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது மக்களின் கருத்தையும் மீறி பேனா வைப்பீர்கள் என்றால், அதிகாரம் எங்களிடம் வந்தால் நிச்சயம் உடைப்போம். பேனா சிலை வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை துவங்குவேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனி தண்ணீர் தொட்டி வைப்பது அவமானம். குடிநீரில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தவர்கள் தமிழகம் வருவது ஒரு வித போர் தொடுப்பு தான். மோடி வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றரைக்கோடி வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்துள்ளனர், இதற்கு பாஜக பின்புலம் உள்ளது.

சூரியன் ஈரோட்டில் கடந்த முறையும் உதிக்கவில்லை, இந்த முறையும் உதிக்கவில்லை. அங்கு மொட்டை கை தான் போட்டிக்கு நிற்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாயை தோற்றம் ஆகும். மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம். நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை. ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள். கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமலஹாசன் காங்கிரசுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும்.

இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்காரும் தான். ஆர்எஸ்எஸ் தடையை நீக்க உதவியதற்காக வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. எங்களை அமைச்சர் சேகர்பாபு அண்ணன் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி விளையாடுகிறார். திராவிடன் மாடல் ஆட்சி என்பது வேடிக்கையானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு எதை செய்து உள்ளார்கள். மலைகள் இல்லாவிட்டால் மழை இல்லாமல் சென்று விடும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மலைகளை கை வைக்க முடியாது, வளங்களை பாதுகாப்போம்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா செயல்படவில்லை. அண்ணாமலைக்கு சீனாவில் இருந்து ஆபத்து வருகிறது என கூறுகிறார்கள். சீனாவை அவ்வளவு கேவலமாக நினைக்கக் கூடாது. அண்ணாமலையால் தமிழ்நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியாது. இலங்கையில் 12 மீனவர்களை சங்கிலியால் கட்டி இழுத்து செல்லப்பட்டனர். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்பட எந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டுமே கண்டனம் தெரிவித்தது.

டாஸ்மாக் மதுபானங்களை சேமித்து வைக்க குளிர் பான அரங்குகளை கட்டும் அரசு டெல்டா மாவட்டங்களில் நெல்களை பாதுகாக்க தவறிவிட்டது. மழையால் பதிகபட்ட டெல்டா விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அது மிகவும் குறைவு. முறையாக கணக்கீடு செய்து உரிய தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.