ஆவின் நிறுவனம் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த தி.மு.க. அரசு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விதமாக தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

தற்போதைய விலை மாற்றம் என்பது விதிமீறல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆவின் பாலினை வாங்கும் நிலை ஏற்படுவதோடு, தனியார் பாலினை பொதுமக்கள் நாடக்கூடிய நிலையும் உருவாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும். அடுத்ததாக, நீல நிற பாக்கெட் பாலிலும் தி.மு.க. அரசு தன் சுயரூபத்தைக் காட்டிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, கொழுப்புச் சத்தினை குறைப்பது, விலையினை உயர்த்துவது, நிதிநிலைமைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.