ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக போடப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2002ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் அவரின் பங்களிப்பு குறித்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. அதை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. பிபிசி-க்கு எதிராக பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், எதிர்க்கட்சிகள் சார்பில் பல இடங்களில் அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பி எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பிபிசி-யின் ஆவணப்படம் இந்தியா குறித்து களங்கப்படுத்துவதாக உள்ளது என்று ஹிந்துசேன தலைவர் விஷ்ணுகுப்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில், பிபிசி இந்தியாவிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு சார்புடையது என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 2002 குஜராத் வன்முறை தொடர்பான பிபிசியின் ஆவணப்படம், பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து, அவரது இமேஜை கெடுக்கும் வகையில் ஒளிபரப்பப்பட்டது என்றும் கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிக்க பிபிசி எடுத்திருக்கும் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரம்தான் இந்த ஆவணப்படம் என்றும் இந்தியாவில் பிபிசிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்த மனு முற்றிலும் தவறானது என்று சுட்டிக்காட்டினார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், தயவுசெய்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்த பின்னணியைப் பாருங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மனுதாரரை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, நாங்கள் இந்த படம் முழுவதையும் தணிக்கை செய்ய நீங்க விரும்புறீர்களா? ஒரு ஆவணப்படம் எப்படி இந்தியாவை பாதிக்கும்? இதை நீங்கள் எப்படி வாதிட முடியும்? பிபிசியை தடை செய்யுமாறு நீங்கள் எப்படி நீதிமன்றத்தை கேட்க முடியும்? என்று கடிந்துகொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.