பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான்: கே.எஸ்.அழகிரி!

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில், ”ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னால் மகிழ்ச்சி தான். அப்படி வந்தார்கள் எனில் நானும் சென்று பார்த்து வருகிறேன். அதில் ஒன்றும் மாற்று கருத்தில்லை” என்று தெரிவித்தார். உடனே செய்தியாளர்கள் இடைமறித்து கேள்வி எழுப்ப முயற்சித்தனர். அதற்கு, ”நாங்கள் ஒன்றும் தலையிட சொல்லவில்லை. இருந்தார்கள் என்றால் மகிழ்ச்சி. நானும் பார்க்கிறேன். அண்ணனை காட்ட சொல்லுங்கள். நாளைக்கே போறேன்” என்று பதிலளித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தனர். இவர்களை விடுவிக்கக் கோரி திராவிடக் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்து வந்தது. வழக்கு, விசாரணை, கருணை மனு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் ஏழு தமிழர்களும் கடந்த ஆண்டு தான் விடுவிக்கப்பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலையால் இந்திய அரசியலே பெரிதும் ஆட்டம் கண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக இந்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஏழு தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சோனியா காந்தியே மன்னித்து விட்டதாக கூறிய நிலையிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஏற்றுக் கொள்ளாத நிலையில் தான் இருந்தனர். கே.எஸ்.அழகிரி கூட ஏழு தமிழர்கள் விடுதலைக்கு எதிரான கருத்தை தான் கூறி வந்தார். இத்தகைய சூழலில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சந்திப்பேன் எனக் கூறியது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி என்ற விஷயத்தை மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால் அவரை நேரில் சந்திப்பேன். நாளைக்கே போகிறேன் என்று கூறிய கருத்துகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.