தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி பிரச்சாரம், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சியினருடன் ஆலோசனை, தேர்தல் வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என பரபரப்பான நிலை காணப்படுகிறது. இவையே தலைப்பு செய்திகளாக மாறி வருகின்றன. இதற்கிடையில் ஏடிஎம் கொள்ளை, வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் கொலை என அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இதில் திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய நகரங்களின் பெயர்கள் அடிபட்டுள்ளன.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்று போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

கோவையில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை. அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை. திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன் நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி. இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.