விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக பழ.நெடுமாறன் பேட்டி அளித்துள்ளார்.

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரபாகரனின் குடும்பத்தாருடன் பழகி வருவதால் இந்த தகவலை அவர்களது அனுமதியுடன் சொல்வதாக பழ. நெடுமாறன் கூறினார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது என்றவர் அவரது குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் தமது டுவிட்டர் பக்கத்தில், தேசிய தலைவரைப் பற்றிய கருத்து.. இந்திய உளவுத்துறையின் திட்டம், ஐயா நெடுமாறன் மற்றும் சமீபகாலமாக “இந்து தமிழ்தேசியமென” கூறிவரும் காசி ஆனந்தன் ஆகியோர்களால் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. தமிழினமே விழித்திரு என பதிவிட்டுள்ளார்.

இதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்கும் பிரபாகரன் குறித்து குறிப்பிடாமல், போலியான நம்பிக்கைகளை விதைப்பது மக்களை மடைமாற்றம் செய்யவே அன்றி, வேறில்லை! என பூடகமாக மறுத்துள்ளார்.