பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள்: மம்தா பானர்ஜி!

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றது. இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல். பிரதமர் மற்றும் குஜராத் கலவரம் குறித்து இரண்டு பகுதி ஆவணப்படத்தை ஒளிபரப்பாளர் ஒளிபரப்பிய சில வாரங்களுக்குப் பிறகு வருமான வரித்துறையின் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதுபோன்ற செயல்கள் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கிறது. பாஜக அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஒருநாள் நாட்டில் ஊடகங்கள் இருக்காது. பாஜக தலைவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே ஆணை சர்வாதிகாரம். அவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.