தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும்: கனிமொழி

தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி-க்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தெருத் தெருவாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழியும் பிரச்சாரத்தில் ஈடுபட ஈரோடு வந்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 39வது வார்டில் மாற்றுக் கட்சியில் இருந்து 214 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். மிகப்பெரிய ஒரு வெற்றியை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்பு கட்டளை. நிச்சயமாக அதுவும் நடக்கும் என்பது மக்களைக் காணும்போது தெரிகிறது. தொடர்ந்து தங்களுக்குள் பல குழப்பங்கள் உள்ள யாருக்குமோ, தமிழ்நாட்டை வடக்கில் இருக்கும் மாற்று சக்திகளுக்கு அடகு வைக்கக் கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடிய, குரல் கொடுக்கக்கூடிய திமுக ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி மிகப் பெரிய, சிறப்பான வெற்றியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் தேர்தலில் தோல்வி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.