முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்: வைத்திலிங்கம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம் என்று ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது. இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான். நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.