ஜெயலலிதா கனவை நனவாக்குவோம்: எடப்பாடி பழனிசாமி

‘மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க, நாம் அனைவரும் பாடுபடுவோம்’ என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

ஜெயலலிதா கடந்து வந்த சோதனைகளையும், நிகழ்த்திய இமாலய சாதனைகளையும் நினைவு கூர்வதும், இளம் தலைமுறையிடம் அவற்றை சேர்ப்பதும், நம் தலையாய கடமை. அ.தி.மு.க.,வை வீழ்த்தி அழித்திட, ஒரு பக்கம் எதிரிகளும், இன்னொரு பக்கம் துரோகிகளும், இழி செயல்கள் செய்த நேரத்தில், அறம் என்ற வாளேந்தி களமாடி, நம் உயிர் நிகர் கழகத்தையும், தமிழக மக்களையும் காத்தவர் ஜெயலலிதா. அவர் தன் ஆட்சியில் மக்கள் நலனை முன்னிறுத்தி, பல்வேறு முத்தான திட்டங்களை செயல்படுத்தினார்.

தி.மு.க., ஆட்சி பதவியேற்ற நாள் முதல், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய முத்தான திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியும், பெயர் மாற்றம் செய்தும் வருகிறது. எதிரிகளும், துரோகிகளும் சூழ்ந்து, அ.தி.மு.க.,வை அழிக்க திட்டமிடுகின்றனர். பாவம் அவர்கள் பகல் கனவு காண்கின்றனர். அவர்களை உறுதியுடன் எதிர்கொண்டு வீழ்த்தி வருகிறோம்.

தி.மு.க., ஆட்சி மக்களை துயர படுகுழியில் தள்ளி இருக்கிறது. மின் கட்டணம், சொத்து வரி, பால் பொருட்களின் விலை என சகலத்தையும் உயர்த்தி, பொதுமக்கள் வாழ்வையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. போதைப் பொருள் வழக்கம், முன் எப்போதும் இல்லாத வகையில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இந்தச் சூழலில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கிறோம். எத்தனையோ மோசடிகளை, ஜனநாயக படுகொலைகளை, ஆளும் தி.மு.க., அரசு அரங்கேற்றினாலும், மக்கள் நம்மோடு நிற்பதை கண்கூடாக பார்க்கிறோம். தமிழக மக்கள் நம் ஆட்சி மீண்டும் மலர காத்திருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்கவும், எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க.,வை வழிநடத்தவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு தாய் பிள்ளைகளாய் நின்று, நாம் அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு, பழனிசாமி தெரிவித்துள்ளார்.