ஆந்திராவில் விசிக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் திருமாவளவன்!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார்.

நாடு தழுவிய அளவிலான தேசிய கட்சிகளாக மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளன. சில மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னர் செல்வாக்கு செலுத்தியது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமது திரிணாமுல் காங்கிரஸை அகில இந்திய கட்சியாக உருமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோவா மற்றும் பல வட மாநிலங்கள், வடகிழக்கு மாநில தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து களத்தில் இருந்து வருகிறது. இதே பாணியை மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி பின்பற்றி வருகிறார். அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம் தேவை என்ற கருத்தின் அடிப்படையில் ஓவைசியும் பல மாநில தேர்தல்களில் களமிறங்கி போட்டியிடுகிறார். ஓவைசி கட்சி பீகாரில் பெற்ற வெற்றியும் வாக்கும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும் அதன் பின்னர் ஓவைசி கட்சியால் தெலுங்கானாவை தவிர பிற மாநிலங்களில் கோலோச்ச முடியாத நிலைதான்.

தற்போது இதே பார்முலாவை தமிழ்நாட்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழ்நாடு நிலப்பரப்பில் கணிசமான செல்வாக்கு கொண்ட தலித் கட்சியாக விசிக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் தொடர்ந்து விசிக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக ஆந்திரா மாநிலத்துக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டார் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மேலும் கர்நாடகா மாநிலத்திலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விசிக கால் பதிக்க தொடங்கியது. இதன் உச்சமாக கர்நாடகாவில் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் விசிகவும் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் சித்தராமையாவை அண்மையில் திருமாவளவன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு, கர்நாடகா தேர்தல் தொடர்பானதுதான் என திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்தார்.

தற்போது ஆந்திரா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தை விஜயவாடாவில் திருமாவளவன் திறந்து வைத்துள்ளார். விஜயவாடாவில் விசிக தலைமை அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆந்திர மாநிலத்துக்கான விசிகவின் காலண்டரையும் திருமாவளவன் வெளியிட்டார். ஆந்திராவில் குண்டூர், மதனப்பள்ளி, பாப்பட்லா ஆகிய இடங்களில் ஏற்கனவே விசிக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.