முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: முதல்வர் இரங்கல்!

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் 90 வயதை கடந்தவர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவர் அவதியுற்றுவந்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள், கடந்த டிசம்பர் மாதம் மதுரையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி பிற்பகலில் திடீரென கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 3 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்தநிலையில் மீண்டும் நேற்று ஓபிஎஸ் தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்ட நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியகுளத்தில் உள்ள வீட்டில் பழனியம்மாள் நாச்சியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் தனது தாயாரின் மறைவு தாங்காமல் அவரின் கால்களை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். பழனியம்மாள் நாச்சியாரின் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தை பெயர் ஓட்டக்காரத்தேவர். ஓட்டக்காரத்தேவர்-பழனியம்மாள் நாச்சியார் தம்பதிக்கு 5 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 9 பிள்ளைகள். அதில் ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகன் ஆவார்.

தாயாரை இழந்துள்ள ஓ பன்னீர் செல்வத்துக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.