தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதல்-அமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மாவட்டங்களில், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மிக மிக முக்கியமான பணியாகும். தென்மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி, சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும். குற்றத்தடுப்பு பணிகள், ரோந்து ஆகிய அடிப்படை காவல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவ்வகை குற்றங்களை குறைக்க முடியும். சைபர் கிரைம் குற்றங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது உங்கள் கடமை. இந்த வகை குற்றங்களால் பெரும்பாலும் ஏமாறுவது எளிய, நடுத்தர மக்கள். ஆகவே, தொழில்நுட்ப பிரிவுகளின் திறனை கூர்மைப்படுத்தி, அவ்வகை குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களைத் தூண்டும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்-அப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் உங்கள் பகுதிக்குள் சாதி ரீதியான உரசல்களோ, பிரச்சினைகளோ, ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும். உங்களிடம் களநிலவரம் முழுமையாகக் கையில் இருக்கவேண்டும். போலீஸ் நிலையங்களில் திடீர் தணிக்கை செய்து போலீசாரின் பணியினை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய விஷயம் தண்டனை விகிதம், அதாவது ‘கன்விக்சன் ரேட்’. புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்தால் மட்டும் நம் கடமை முடிந்துவிடாது. அதனை, விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தால்தான், முழுமையாக உங்கள் பணியை செய்ததாகக் கருதப்படும். அப்போதுதான் பொதுமக்களுக்கும் காவல்துறையின் மீது பெரும் மதிப்பு உண்டாகும். இதற்காக நீங்கள் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் விபத்துகளால் விலை மதிப்புமிக்க உயிர்கள் பறிபோவது, பெரும் வேதனைக்குரியது. எனவே, சாலை பாதுகாப்புப் பணிகளில் பொதுமக்களுடன் இணைந்து, விழிப்புணர்வுப் பிரசாரங்களை விரிவுபடுத்த வேண்டும். அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அப்பகுதிகளில் மீண்டும் விபத்து ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இந்த பணியில் நீங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்ற மாணவ அமைப்புகளையும் பெருமளவு ஈடுபடுத்த வேண்டும்.

தென்மாவட்டங்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் இளைஞர்களை போதைப்பொருள் என்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் பெரிய வியாபாரிகளை, போதைப்பொருள் கடத்துபவர்களை நீங்கள் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும். இதனை, காவல்துறை தலைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறை என்பது ஏழை, எளிய மனிதர்களின் பாதுகாவலனாக, அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் எந்நாளும் துணை நிற்பவர்களாக செயல்படவேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நினைவில் கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் எவராக இருந்தாலும், எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையினைத் தந்து அவர்களது குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுங்கள்.

காவல் நிலையம் என்பது, எளிய மனிதர்கள், பெண்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்கள் என எல்லோரும் எவ்வித தயக்கமும் இன்றி வந்து புகார் அளிக்கக் கூடிய ஒரு இடமாக இருக்கவேண்டும். இதற்காக, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குங்கள். “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற சொல்லுக்கேற்ப, நாம் செயல்படவேண்டும். சிறப்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், குற்றங்கள் நிகழ்ந்த பிறகு அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல், புகார் தெரிவிக்க வரும் மக்களிடம் பரிவோடு நடந்து கொள்ளுதல் ஆகியவையே சிறந்த காவல் பணிக்கு இலக்கணமாகும். அவற்றை, நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் சட்டம்-ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். உங்கள் சிறப்பான பணிக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.